பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து வாட்ஸ் அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்

 

பெரம்பலூர், ஜூன் 2: பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து வாட்ஸ் அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் சரண்யா அறிவுறுத்தினர். நிலத்தடி நீர்நிலை பெரம்பலூர் மாவட்டத்திற்கு சவாலாக இருக்கிறது. அந்த பிரச்னையை ஆணி வேரோடு அகற்ற வேண்டும் என பெரம்பலூரில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சரண்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. நம்மிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய வலிமையே நிலவளம் தான். இந்த நிலத்தை எப்படி தொழில்களுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் எப்படி மாற்றுவது என்பது தொடர்பான அரசின் ஆலோசனைகளை ஏற்று மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

இவை தவிர நான் இதற்கு முன் பணிபுரிந்த கல்வித்துறை, சமூகநலத்துறை அனுபவங்களை எடுத்து கொண்டு முழு குறிக்கோளும் குழந்தைகள், முதியோர், பெண்கள், இளைஞர்கள் போன்றோருக்கான செயல்பாடுகளில் என்னுடைய நாட்டம் அதிகம் இருக்கும். பெரம்பலூரில் பள்ளி குழந்தைகளை பொருத்தவரை அவர்களுக்கான சத்துணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பெண்களின் உடல்நிலை, முதியோரை மனநிலை, இளைஞர்களை விளையாட்டு, உயர் கல்விக்கான வாய்ப்புகள், நிறைய பேருக்கு சிவில் சர்வீஸ் எக்ஸாமினேஷன், டிஎன்பிஎஸ்சி எக்ஸாமினேஷன் போன்ற அரசு தேர்வுக்கான பயிற்சிகள், திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது போன்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் முனைந்து செயல்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு-குறு விவசாயிகள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக வந்து பேசலாம். பெரம்பலூர் நிலத்தடி நீர்மட்டம் குறித்து பிரச்னைகள் இங்குள்ளது. நிலத்தடி நீர்நிலைபெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒரு சவாலாக இருக்கிறது. அந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கான தீர்வு என்ன என்பதென கண்டறிந்து, அந்த பிரச்னையை ஆணி வேரோடு அகற்ற வேண்டும். அதற்கான திட்டமிடுதலும் அதற்கான முன்னேற்பாடுகளும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும். இவர்கள் மட்டுமின்றி ஒரு மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் வழி நடத்த வேண்டும் என்றால் அரசால் மட்டும் முடியாது.

பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் என அனைவரும் சேர்ந்து ஒன்றாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் நாம் மாவட்டத்திற்கான வளர்ச்சியில் நினைக்க கூடிய அந்த முன்னேற்றத்தை அடைய முடியும். அந்த முன்னேற்றம் சீக்கிரமாக முழுமையாகவும் நடக்கும். எனவே பத்திரிகையாள் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும். எப்போதும் திறந்த மனதோடு உங்கள் கருத்துக்களை தெரிவிங்கள். என்னை பொறுத்தவரை வெளிப்படை தன்மை எனக்கு இயல்பாக வரும். என பெரம்பலூர் கலெக்டர் சரண்யா பேசினார்.

 

Related Stories: