புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 511 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை நண்பர்கள் (யுவா ஆப்தமித்ரா) திட்டத்தின் கீழ் வேலூரில் நடைபெற்ற பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 10 திட்ட பயிற்றுநர்கள் தாங்கள் பெற்ற பயிற்சி சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், கறம்பக்குடி வட்டாட்சியர் பிரவீனா மேரிக்கு பரிசு கோப்பையினை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது எனவும் மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் 2023 ஆம் ஆண்டிற்கு படைவீரர் கொடி நாள் வசூல் ரூ.1.83 கோடி புரிந்தமைக்காக ஆளுநரிடம் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமால், மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
