ரூ.2.87 லட்சம் கோடி அளித்த ரிசர்வ் வங்கி மோடி அரசின் நிதிநிலை சரியில்லை: காங்கிரஸ் தகவல்

 

புதுடெல்லி: மோடி அரசின் நிதிநிலை சித்தரிக்கப்படுவது போல சிறப்பாக இல்லை. பெரும் போனஸ் அளித்து ரிசர்வ் வங்கி அரசுக்கு ஒரு சலுகை செய்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகையை வழங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஒன்றிய அரசின் நிதிநிலை சித்தரிக்கப்படுவது போல அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதற்கு, ரிசர்வ் வங்கி அரசுக்கு ஒரு சலுகை செய்து பெரும் போனஸ் அளித்துள்ளது என்பதே சான்றாகும்.

தன்னால் பராமரிக்கப்படும் எதிர்பாரா இடர் காப்பு நிதியை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தி வந்த ரிசர்வ் வங்கி, 2025-26 நிதியாண்டிற்காக அதனைக்குறைக்க முடிவு செய்தது. இதன் விளைவாகவே, ஒன்றிய அரசுக்கு அது வழங்கும் ஈவுத்தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான எதிர்பாராத இடர் காப்பு நிதி குறைக்கப்படாமல் இருந்திருந்தால் அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகையை விட, கூடுதலாக ரூ. 92,000 கோடி என்ற பெரும் போனஸ் ஒன்றிய அரசுக்குக் கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: