ஈரோடு, மே 22: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடந்த தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு முந்தைய திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2016-கட்டமைப்பிற்குப் பதிலாக, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026யை, கடந்த ஜன.27ம் தேதி அறிவித்தது. இந்த விதிகள் ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, தூய்மை திருவிழா என்ற தலைப்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி சார்பில் தூய்மை திருவிழா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் வளாகத்தில் துவங்கிய பேரணியை, மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் துவங்கி வைத்தார். பேரணி ஜிஹெச் ரவுண்டானா வழியாக சென்று காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நிறைவடைந்தது. இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, உரிமையாளர்களே தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
