ஈரோடு, மே 22: ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும், சுமார் 24,000 தெருநாய்கள் இருப்பது, சமீபத்தில் மாநகராட்சி சார்பில் நடந்த நாய்கள் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தினசரி 25 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்படுகிறது. பின்னர், கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள், 4 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, பிறகு அதே இடத்தில் கொண்டு வந்துவிடப்படுகிறது.
