விழுப்புரம், மே 20: விழுப்புரம் அருகே பிடாரியம்மன் கோயில் கலசங்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். விழுப்புரம் அருகே ப.வில்லியனூரில் பிரசித்தி பெற்ற எல்லை பிடாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு வந்த போது கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த மூன்று கலசங்கள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இப்பகுதியில் வீடு புகுந்து திருட்டு சம்பவம், சிசிடிவி கேமராக்கள் திருடு என தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யவில்லை. குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கவில்லை. கடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் இந்த கோயில் கலசத்தையும் திருடியுள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
