ஊர்காவல் படை வீரர் மீது தாக்குதல்: வாலிபர் கைது

 

புதுச்சேரி, மே 19: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் தரியலதிப்பா புறக்காவல் நிலையத்தில் புலா தினேஷ் (26) என்பவர் ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாவித்திரி நகரில் ஆசாமி ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர் புலா தினேஷ் சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த பெம்மாடி லோபராஜூ (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தபோது தினேஷை தகாத வார்த்தையால் திட்டி, தாக்க முயன்றுள்ளார்.

மேலும், கீழே கிடந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து காவலரின் கையில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த தினேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏனாம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஊர்காவல்படை வீரர் புலா தினேஷ், ஏனாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பெம்மாடி லோபராஜூ மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: