பதவி ஆசை காட்டி குதிரை பேரம் நடத்தினர் அதிமுகவை உடைக்க தவெக சதி: எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு

 

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும் ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரித்து அதிமுகவை உடைக்க சதி செய்வதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களில் வென்ற தவெக தற்போது ஆட்சியை அமைத்துள்ளது. தவெகவிற்கு விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமமுகவின் ஒரு எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியின் 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் வேலுமணி அணி மற்றும் அமமுக, காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க விஜய் முன் வந்துள்ளார். இதனால் தற்காலிகமாக தவெகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் பல துறைகளை தங்கள் கைகளில் வைத்துள்ளனர். உயர்கல்வித்துறை உள்ளிட்ட சில முக்கிய இலாகாக்கள் யாரிடமும் வழங்கப்படவில்லை. இதனால் வேலுமணியின் ஆதரவர்கள் சீக்கிரமாக தங்கள் அணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு 15 சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவை உடைத்து தவெக ஆட்சியை தக்க வைத்துள்ளதற்கு தமிழகத்தில் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. தூய ஆட்சி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்து விட்டு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத நிலையில், மற்றொரு பெரிய கட்சியை உடைக்கும் வேலையை தவெக பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று நடத்துகிறார்.

இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `காய்த்த மரம்தான் கல்லடி படும்’. அப்படித்தான் எதிரிகளின் ஆசைவார்த்தைகளுக்கு மயங்கி, அதிமுக என்னும் கம்பீரமான ஆலமரத்தின் நுனிக் கிளையில் சிலர் அமர்ந்துகொண்டு அடி மரத்தையே வெட்டி சாய்க்க பார்க்கிறார்கள். அவர்கள்தான் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, ஆலமரத்திற்கு எந்த தீங்கும் வராது. தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளை சந்தித்து, மீண்டு வந்தவர்கள்தான்.

அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்ற நிலையில் நம் இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் வெல்லவில்லை என்பது உண்மை. அதேநேரம், நாம் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழக்கவுமில்லை. நாம் 21.21 சதவீத வாக்குகள் அதாவது தனித்து 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகளும், கூட்டணியோடு சேர்ந்து சுமார் 1 கோடியே 34 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளோம்.

அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் 47 சட்டமன்ற தொகுதிகளும், கூட்டணி கட்சிகள் 6 தொகுதிகளும் என மொத்தம் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் விருப்பத்தையும், நமது பின்னடைவையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், இந்த தோல்வியை கண்டு நாம் கொஞ்சமும் துவளவில்லை. ஏனென்றால், இது நிரந்தரமில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த தேர்தலில் எந்தஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவையும், பெரும்பான்மையையும் கொடுக்கவில்லை.

எனவே, தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணி கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அதிமுகவின் முதுகில் குத்தி உள்ளது.

பொதுவாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும் ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டது. வரலாற்றை புரட்டிப் பார்த்தால், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. இப்போதும் நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலில் அவ்வப்போது சில புயல்கள் வந்துபோகும். அந்த புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிற்கும் ஆயிரம் காலத்து பயிர் `அதிமுக’ என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் இன்றுவரை இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தெரியும். அவர்களின் வழிகாட்டுதல்படியே இன்றும் நாம் செயலாற்றி வருகிறோம். நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்னைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்னை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். ஜெயலலிதா ஆட்சி விரைவில் அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: