புதுடெல்லி: இலங்கையின் மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் தென்கடலோரத்தில் அமைந்துள்ளது ஹம்பாந்தோட்டை துறைமுகம். இந்த துறைமுகத்தை உருவாக்க சீனாவிடம் வாங்கிய கடனை இலங்கை அரசு திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், கடந்த 2017ம் ஆண்டு சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. ஆசியாவின் முக்கிய வர்த்தக தடத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தை சீனா தனது கடற்படை தளமாக பயன்படுத்த கூடும் என்று இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகே உள்ள மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட இலங்கை முடிவு செய்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான விஷன் மகாசாகர் அர்ப்பணிப்பு உணர்வின் ஒருபகுதியாக மத்தள ராஜபக்சே விமான நிலையத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நிர்வகிக்கவும், பராமரிக்கவும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
