10 ஆண்டுகளில் 81 பணிகள் நிறைவு; ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தை கலைக்க அரசு உத்தரவு : நகர்ப்புற திட்டமிடலுக்கு பயன்படுத்த எதிர்பார்ப்பு

 

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தை கலைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நகர்ப்புறத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, புனரமைப்புக்காக இந்த நிறுவனத்தின் திறனை பயன்படுத்திக்கொள்ளவும், வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பத்தாண்டு காலக்கெடு நிறைவடைந்ததால் கடந்த மார்ச் 31ம் தேதி புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனத்தின் கணக்கை நிறைவு செய்யுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 82 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், அவற்றில் 81 திட்டங்கள் இதுவரை நிறைவடைந்துள்ளன. இதில் கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மில் அருகே உள்ள லெவல் கிராசிங்கில் சாலை மேம்பாலம் கட்டும் பணி மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே திட்டமாகும். இதன் பணிகள் 2025ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கி தற்போது நடந்து வருகிறது. திட்டத்தின் மொத்த செலவான ரூ.72 கோடியில், ஸ்மார்ட் சிட்டி நிறுவனமானது தனது முழுப்பங்கான ரூ.52 கோடியை தெற்கு ரயில்வேக்கு மாற்றியுள்ளது. இதை தொடர்ந்து நிறுவனத்தை கலைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி சொத்துகள் உள்ளாட்சி நிர்வாக துறைக்கு மாற்றப்படும். தற்போதுள்ள பணியாளர்களும் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் பொறுப்புகளும், தாய் துறைகளுக்குள் மறுபகிர்வு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஸ்மார்ட் சிட்டி சிறப்பு நோக்க நிறுவனம் (SPV), அதிகப்படியான நகர்ப்புற திட்டங்களை நிர்வகிப்பதற்கான வலுவான திறன்களை வளர்த்துள்ளது. குறுகிய காலக்கெடுவுக்கு திட்டங்களை செயல்படுத்துவதோடு, திறமையான நகர்ப்புற மேலாண்மை பணியாளர்கள் உருவாவதற்கும் பங்களிக்கிறது. சிறப்பு நோக்க நிறுவன அமைப்புகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சிறப்பு நோக்க நிறுவனம் சிக்கலான மற்றும் மாறிவரும் நகர்ப்புற சவால்களை எதிர்கொள்வதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆதரவளிக்கலாம். அவற்றின் முக்கியத்துவத்தையும் அங்கீகரித்து, புதுச்சேரி அரசு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும், அந்த சிறப்பு நோக்க முகமை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யலாம். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பல மாநிலங்கள் தற்போது ஸ்மார்ட் சிட்டி சிறப்பு நோக்க நிறுவனங்களை எதிர்கால நகர்ப்புற திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் செயலாக்க முகமைகளாக மாற்றியுள்ளது, என்றார்.

சிறப்பு நோக்க முகமைகளை தக்கவைத்து கொள்வதையும், அவற்றின் பயன்பாட்டை மாற்றுவதையும் இந்த திசை ஊக்குவித்தாலும், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் முழு செயல்பாட்டு சூழலமைப்பையும் முடிவுக்கு கொண்டுவரும் திசையில் நகர்வதாக தெரிகிறது. இது ஒரு பெரும் நிறுவன இழப்பாக அமையும். ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, புதுச்சேரி ஒரு சிறிய யூனியன் பிரதேசம். இங்கு சிக்கலான, உட்கட்டமைப்பு திட்டங்களை கையாளும் திறன் கொண்ட, தொழில்முறை ரீதியாக கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற திட்ட மேலாண்மை அமைப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் செயல்பாட்டு அனுபவத்துடன் கூடிய, பயிற்சி பெற்ற மனிதவள சூழலை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை கலைப்பது, பயிற்சி பெற்ற மனிதவள இழப்புக்கும் நகர்ப்புற திட்டமிடல் இழப்புக்கும் வழிவகுக்கும், அதன் மூலம் எதிர்கால திட்டங்களை செயல்படுத்தும் திறனை பலவீனப்படுத்தும். திட்டமிடப்பட்டுள்ள பல திட்டங்களுக்கு உலக வங்கி போன்ற முகமைகளுடன் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. தொழில்முறை நிபுணர்களை கொண்ட ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் அத்தகைய திட்டங்களை திறமையாக செயல்படுத்தும் நகர்ப்புற முகமையாக உருவெடுக்க முடியும். புதிய அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட பணிக்கான தற்காலிக அமைப்பாக மட்டும் கருதாமல், ஒரு நீண்டகால பார்வையை கொண்டிருக்க வேண்டும், என்றார்.

Related Stories: