தேவகோட்டை, மே 15: தேவகோட்டை வெள்ளையன் ஊரணி மேல்கரையில் ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரமோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
இந்த பிரமோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை கோதண்ட ராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர்,நேற்று மாலை விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். \”கோவிந்தா\” கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
