வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர் விசா திட்டத்தை தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியர் உள்பட 10,000 மாணவர்களுக்கு அமெரிக்க குடிவரவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் மாணவர் விசாக்களுடன் விருப்ப பயிற்சி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு 12 பட்டம் பெற்ற பிறகு 12 மாதங்கள் வரை அந்நாட்டில் பணிபுரிய இது அனுமதிக்கிறது.
மேலும், சில அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் 24 மாதங்கள் வரை நீட்டிப்பு பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டம், வேலையளிப்பவரால் வழங்கப்படும் எச்-1பி விசாக்களைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை இயக்குனர் டாட் லயன்ஸ் கூறுகையில்,மாணவர் விசா திட்டமானது பெருகி வரும் மோசடியின் காந்தமாக உள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய பல வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உளவு பார்த்தல், அறிவுசார் சொத்துத் திருட்டு, வேலைவாய்ப்பு மோசடி மற்றும் வயதான அமெரிக்கர்களை இலக்காகக் கொண்ட மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும்.
வெளிநாட்டு மாணவர் அமைப்பிலிருந்து எழும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது. விசாரணைகளின் ஒரு பகுதியாக புலனாய்வாளர்கள் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.மோசடியில் ஈடுபட்ட இந்தியர் உள்பட 10,000 மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
