வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் தேடியுள்ளனர். இதில், சிறுவனை அந்த வீட்டை சேர்ந்த பிளஸ் 1 மாணவன், அறையில் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, குட்கா உள்ளிட்ட போதை புகையிலையை சிறுவனுக்கு கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து புகாரின்படி வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். அதில், சிறுவனின் பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவன், நைசாக பேச்சு கொடுத்து, சிறுவனை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிளஸ் 1 மாணவன் மீது வழக்குப்பதிந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
