டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஃபுஜைரா எண்ணெய் ஆலை மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சிவில் உள்கட்டமைப்புகளை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், பொதுமக்களையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மோடி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா உறுதியான ஒற்றுமையுடன் நிற்பதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான தீர்வு காண்பதற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பை நீடிப்பதற்கு, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது இன்றியமையாதது என்று மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பெட்ரோலியத் தொழில் மண்டலத்தில் (FOIZ) நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று இந்தியர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சகமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்தத் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்தது. அமைச்சகம் ஒரு அறிக்கையில், உடனடியாகப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, பொதுமக்களின் உள்கட்டமைப்புகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் குறிவைத்ததைக் கண்டித்தது. மேற்கு ஆசியா முழுவதும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீட்டெடுக்கப்படும் வகையில், இந்நிலையைச் சமாளிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்தது.
சர்வதேச சட்டத்திற்கு இணங்க, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. இப்பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அமைச்சகம் மேலும் வலியுறுத்தியது.
