சென்னை: மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார். மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தவெக விஜய் நிரஞ்சன், நாம் தமிழர் கட்சியில் விஜய் விக்ரம் உள்பட 21 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 16 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 360 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோன்று 2,009 தபால் ஓட்டுகளும் பதிவானது.
இதன்மூலம் மொத்தம் 89.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இங்கு பதிவான வாக்குகள் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 82 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் நிரஞ்சன் 52 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்று 2வது இடமும், தேமுதிக வெங்கடேசன் 46 ஆயிரத்து 267, நாதக விஜய்விக்ரம் 4,386 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நிலையில், மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
