மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாட்டில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பனை மரம் வளர்ப்போர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. கள் போதைப்பொருள் அல்ல. உடலுக்கு நல்லது.
வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை விட கள்ளில் குறைவாகவே போதை உள்ளது. எனவே, மதுவிலக்கு சட்டத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிப்பட்டிருப்பதை நீக்கி, கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கவும், தனிப்பயன்பாடு மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜராகி, ‘‘கள் இறக்க தடை விதித்திருப்பது அரசின் கொள்கை முடிவு, கள்ளில் கலப்படத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
