உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

 

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பார் கவுன்சில் மூத்த உறுப்பினருமான எம்.வேல்முருகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பபோது எம்.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனநாயகத்தின் அடி நாதமாக உள்ளது நீதித்துறை. இந்தியா முழுவதும் 1110 நீதிபதிகள் உள்ள நிலையில், 300 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையோடு சேர்த்து 75 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது 53 நீதிபதிகளை மட்டுமே உள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளது. வரும் மே மாதம் மூத்த நீதிபதி சுரேஷ் குமார் ஓய்வு பெற உள்ளார். ஏற்கனவே, 24 பேர் பட்டியல் அனுப்பப்பட்ட நிலையில் எந்த முடிவும் இதுவரை ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை. இதனால் நீதித்துறையில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு வழக்கை மீண்டும் பட்டியலிட சிரமமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் நம்பிக்கை குறைந்துள்ளது.

எனவே, நீதிபதிகளின் பதவிக்காலம் முடிவடைவதை முன் கூட்டியே தெரிந்து நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் உடனடியாக நிரப்ப வேண்டும். சென்னை உயர்நீதி நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது சமூகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமூக நீதியை பின்பற்றி நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாக கையெழுத்திட்ட மனு ஒன்றிய அரசுக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளோம். இதுகுறித்து அடுத்தகட்டமாக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: