*கலெக்டர், டிஆர்ஓ., பங்கேற்பு
நாமகிரிப்பேட்டை : வெண்ணந்தூரில் இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்து பங்கேற்றார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சாலை அருகில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள 100 இளம்வாக்காளர்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தொடர்ச்சியாக தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளான 18 வயதிற்கு மேற்பட்ட முதல்முறை வாக்களிக்க உள்ள 100 இளம்வாக்காளர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியினை கலெக்டர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்து, அவர்களுடன் இணைந்து சைக்கிள் ஓட்டினார்.
இந்த சைக்கிள் பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, அப்பகுதி பொதுமக்களிடம் தேர்தல் நாளான 23ம் தேதி அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் இந்தியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
