திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருப்புவனத்தில் நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மதுபான கடைகள் மூடப்படும். குடிமகன்களுக்காக மரங்களில் இருந்து இறக்கப்படும் பனம் பால், தென்னம் பால், ஈச்சம் பால் ஆங்காங்கே விற்கப்படும். வேளாண்மை செழிக்க ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, கழுதை பண்ணை வைக்க விவசாயிகளுக்கு வசதி செய்யப்படும்.
இவற்றின் பால்களை செறிவூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சீமைக்கருவேல மரங்கள், யூகலிப்டஸ் தைல மரங்களை வேரோடு அழித்துவிட்டு, நாட்டு மரங்கள், லட்சக்கணக்கான பனைமரங்கள் வளர்க்கப்படும். சோலை வனத்தில் இருந்து பாலைவன தேசங்களுக்கு செல்லும் இளைஞர்களை தடுத்து, அவர்கள் படித்து முடித்தவுடன் அரசு வேலை உடனடியாக வழங்கப்படும். நல்ல சுகாதாரமான காற்று, நல்ல குடிதண்ணீர் கட்டணமின்றி வழங்கப்படும்.
