சென்னை: ரவி மோகன், ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கிற்கான விசாரணை நடந்துவரும் நிலையில், ரவி மோகனுக்கு அவரது மகன்களை பார்க்க அனுமதி அளித்தும், அவர் மாதம் 3 லட்சம் ரூபாய் ஆர்த்திக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து, ‘அவரது 2 குழந்தைகளின் கல்வி செலவுக்காகத்தான் பணம் கேட்டோம்.
ஆர்த்தியின் தனிப்பட்ட செலவுக்காக பணம் கேட்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நண்பர்கள் தினத்தையொட்டி ரவி மோகன் வெளியிட்ட பதிவில், ‘எனது மிகவும் அன்பானவர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். உண்மையான நண்பர்களை போல எனக்காக நின்றதற்கு நன்றி.
சில நபர்கள் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. என்னை பொறுத்தவரை நான் ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன், நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் 4 பேரும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கப்போவது இல்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
