ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள் பணக்காரர்கள் உயர்ந்ததுதான் மோடி அரசின் சாதனை: மாணிக்கம் தாகூர் தாக்கு

 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘உலக சமத்துவமின்மை ஆய்வகம்’ என்ற அமைப்பு வெளியிட்ட, ‘2026 உலக சமத்துவமின்மை’ அறிக்கையில், ‘இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா’ என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் வருமானம், செல்வம், பாலினம் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 2025-26ம் ஆண்டில், 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் 142 பேராக இருந்த நிலையில், 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மோடி அரசே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சிதான் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். நடுத்தர மக்கள் வாங்கும் சக்தியை இழந்து கீழே சென்று கொண்டிருக்கிறார்கள். சொத்து குவிப்பில், அதானி குழுமம் கின்னஸ் சாதனை படைக்க உதவியதுதான், கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்திய ஒரே சாதனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: