ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் தேர்வாணைய முன்னாள் தலைவர் தமன்சிங்சோன்வானியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியவர் தமன்சிங் சோன்வானி. ஐஏஎஸ் அதிகாரியான இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் 2020ல் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேர்வாணைய தலைவராக இருந்த போது தனது உறவினர்கள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்களின் பிள்ளைகளுக்கு துணை கலெக்டர் மற்றும் டிஎஸ்பி போன்ற பதவிகள் பெறுவதற்காக அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் தமன்சிங்கை அமலாக்கத்துறை நேற்று கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
