பெரம்பூர்: சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் நின்றதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போக்குவரத்து தலைமை காவலர் திருஞானவேல், காவலர்கள் ஆகியோர் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்து சாலையில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றினர். இதன்பிறகு அவர்கள் கொடுத்த தகவல்படி, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் வந்த கழிவு நீரை அகற்றினர். உடனடியாக கழிவுநீரை அகற்றிய போக்குவரத்து போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
