*டிஆர்ஓ சமரசம்
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட கலெக்டரின் தீர்வு செயலி திட்டத்தை கண்டித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன், பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்றும் வகையில், தீர்வு என்ற மொபைல் ஆப்பை கடந்த மாதம் அறிமுகம் செய்தார். இதில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், கலெக்டர் மதுபாலன், கடந்த மாதம் வருவாய்த்துறையில் பணியாற்றும், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்களை மாவட்டத்திற்குள் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார். இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக, வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
கலெக்டரின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து, நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மணிவேல், நரசிம்மன், செங்கமலை ஆகியோர் தலைமை வகித்து, கலெக்டரின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அமைச்சர்கள், உயரதிகாரிகளின் வரவேற்பு, அரசு விழாக்களுக்கு அரசு நிதி ஒதுக்காத பட்சத்தில் செலவினங்களை செய்ய மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை அலுவலர்களை நிர்பந்தம் செய்யக் கூடாது. அலுவலக வேலைநேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தக் கூடாது என வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றனர். ஆனால், அப்போது கலெக்டர் மதுபாலன் இல்லை. இதனால், அதிருப்தியடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், கலெக்டர் உடனடியாக வரவேண்டும் எனக்கோரி, திடீரென காத்திருப்பு போராட்டத்தில் குதித்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, டிஎஸ்பி ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சர்மிளாபானு ஆகியேர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கலெக்டரிடம் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறினார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்றிரவு நடத்திய திடீர் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
