புழல்: பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து காற்றாலைக்கு தேவையான ராட்சத இறக்கைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு நேற்று நள்ளிரவு 4 கனரக வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இன்று அதிகாலை செங்குன்றம்-திருவள்ளூர் கூட் சாலைக்கு வந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியபோது சாலை தடுப்பு சுவரில் ஒரு கனரக வாகனம் ஏறி பழுதாகி நின்றது. அடுத்தடுத்து வந்த கனரக வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை.
ஆனால், கனரக வாகனத்தில் முன்பகுதி சேதமாகியுள்ளது. 100 அடி நீளம் கொண்ட கனரக வாகனம் சாலை குறுக்கே நின்றதால், செங்குன்றம்-திருவள்ளூர் கூட் சாலை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போக்குவரத்து போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
