*பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
ஆரணி : தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடந்து முடிந்தது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, கடந்த மார்ச் 15ம் தேதி ஆரணி சட்டமன்ற அவலுலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், நடந்த முடிந்த தேர்தலில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயசுதா வெற்றி பெற்று, மே 11ம் தேதி பதவியேற்றார்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து சுத்தம் செய்து, எம்எல்ஏ பெயர் பொறிக்கப்பட்டு, புதுப்பித்து அலுவகத்தின் சாவியை எம்எல்ஏ ஜெயசுதாவிடம் வழங்கினர். அதன்பிறகு எம்எல்ஏ அலுவலகத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக பொதுப்பணிதுறை அதிகாரிகளை வரவழைத்து, மீண்டும் நான் சொல்வதைபோல் அலுவலகத்தை தாயர் செய்து தருமாறு தெரிவித்தார்.
அதற்கு, அதிகாரிகள் புதுப்பித்தல் பணிக்கு ஒதுக்கிய நிதி செலவாகிவிட்டதால், மீண்டும் சரிசெய்ய போதிய நிதி இல்லையென தெரிவித்தனர். அதற்கு எம்எல்ஏ ஜெயசுதா எந்த காரணங்களும் கூறாமல், அலுவலகம் சீரமைக்க மறுதிட்ட மதிப்பீடு செய்து, பணிகளை முடிக்க கூறினார்.
பின்னர், அதிகாரிகள் அலுகலகத்தில் புதுமையாக இருந்த டைல்ஸ், பயன்பாட்டில் உள்ள பொருட்களை இடித்து அப்புறப்படுத்தி மீண்டும் வண்ணம் தீட்டி பணிகள் செய்ததால் மக்களின் வரி பணம் வீணாகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், பணிகள் முடிவடைந்தும், இதுவரை எம்எல்ஏ ஜெயசுதா அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொகுதி மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சங்க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், கோரிக்கை மற்றும் பிரச்னைக்கள் குறித்து எம்எல்ஏவை நேரில் சந்தித்து புகார்கள் தெரிவிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
அதேபோல், எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதால், எம்எல்ஏ அலுவலகம் முன் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு எம்எல்ஏ அலுவலகம், ஆட்டோ ஸ்டாண்டாக மாறியுள்ளது.
எனவே, திறக்கப்படாமல் உள்ள எம்எல்ஏ அலுவலத்தை உடனடியாக திறந்து வைத்து, பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை எம்எல்ஏ கேட்டறிந்து மனுக்களை பெற்று பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
