திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் கலெக்டர் அலுவலகம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய இரண்டாவது மகள் ரஞ்சனி (23). இவர், தமிழ்நாடு காவல்துறையில் 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தற்போது ரஞ்சனி, திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். ரஞ்சனி நல்லூர் அடுத்துள்ள நல்லிகவுண்டன்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் ரஞ்சனி, மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் காதல் விவகாரம் திருமணம் வரை சென்று பேசி முடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை ரஞ்சனி வழக்கம்போல் புறப்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் நடக்கும் வருகை அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் ரஞ்சனியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், ரஞ்சனியை கடுமையாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சனி, ஆயுதப்படையில் இருந்து தனது குடியிருப்பிற்கு திரும்ப வந்துள்ளார். தொடர்ந்து ரஞ்சனி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ரஞ்சனியின் செல்போனுக்கு கடைசியில் போன் செய்த நபரான ஆயுதப்படை போலீஸ் சீனிவாசன் என்பவரையும், ரஞ்சனியை காதலித்து வந்த மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் பவுன்குமார் என்பவரையும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
