பயனர்களின் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில், வடமத்திய ரயில்வே புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, டிக்கெட் பரிசோதகர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் டிக்கெட் பரிசோதனையின் போது நடைபெறும் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் துல்லியமாகச் சேமிக்கப்படும். பயணிகளின் புகார்கள், தகராறுகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தப் பதிவுகள் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி வழித்தட ரயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னோடி திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், வடமத்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களிலும் இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
