நியாய விலை கடையில் தரமில்லாத அரிசி வினியோகம்: கடைக்காரரிடம் பெண்கள் வாக்குவாதம்

வேலூர், ஜூலை 13: வேலூரில் நியாய விலை கடையில் தரமில்லாத அரிசி வினியோகம் செய்ததை கண்டித்து, ரேஷன் கடைக்காரரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. இதில் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி தரமில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் சைதாப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் அமுதம் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சுமார் 700க்கும் ேமற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க நியாய விலை கடைக்கு சென்றார். அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றார். வீட்டில் வாலிபரின் தாய் ரேஷன் அரிசியை கையால் எடுத்துப் பார்த்தார். அப்போது, அந்த அரிசி தரம் இல்லாமல், துர்நாற்றம் வீசியதுடன், அரிசி கட்டி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண் தரம் இல்லாத அரிசியை வழங்கிய, நியாய விலை கடைக்கு சென்று ரேஷன் கடை விற்பனையாளரிடம் கொண்டு காண்பித்தார். தனக்கு தரமான அரிசி வழங்க வேண்டும். மேலும், தரமில்லாத அரிசியை சாப்பிட்டால் உடல்நிலை பாதிக்கும் எனவும் இந்த அரிசியை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் கடைக்கு வந்திருந்த பெண்கள் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடையில் இருந்த பெண்களுக்கு கடை விற்பனையாளர் கடையில் வைத்திருந்த மற்றொரு முட்டையில் இருந்து தரமான அரிசியை வழங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: