தர்மபுரி, ஜூன் 25: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, மின்னஞ்சல் மூலம் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் 3 மணி நேரம் சோதனை செய்தனர். மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, நேற்று காலை வழக்கம் போல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, காலை 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் வந்தது.
இது குறித்து வழக்கறிஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்களை வெளியேற்றி விட்டு, நீதிமன்ற வளாகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
