புதன்சந்தையில் 2 கோடிக்கு வர்த்தகம்

 

சேந்தமங்கலம், ஜூலை 26: புதன்சந்தையில் நேற்று மாடுகளில் வரத்து அதிகரித்த போதிலும், மாடுகள் விலை குறைந்தது. ₹2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம், திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக அதிக அளவில் மாடுகள் வந்திருந்தது.

தொடர் மழை காரணமாக மாடுகளை வாங்க வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. கேரளா மாநிலத்தில் மீன் வரத்து அதிகரிப்பதால் மாட்டு இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. பால் உற்பத்திக்காக விவசாயிகள் கறவை மாடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக சந்தையில் மாடுகள் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ₹23 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹46 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹16 ஆயிரத்திற்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ₹2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புதன்சந்தையில் 2 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: