×

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங். சார்பில் மனமார வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை!

சென்னை: வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமார வரவேற்கிறது.

ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து வரும் சூழ்நிலையில் தங்கள் அதிகார மமதையால் இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் ஒற்றை நோக்கத்தோடு வக்பு திருத்த சட்ட மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது அதற்கு உடனே குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.

“பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே சமூக நீதி” என்பதை கொள்கை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம் இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்த போதிலும் ஜனநாயகத்தின் வழியில் முதல் நபராக வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்தனர்.

இன்று வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

புதிய வக்பு திருத்த சட்ட மசோதா அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்றும் வக்பு சொத்துக்களை புதிய நடைமுறைப்படி வரையறுக்க கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய ஜனநாயக நாட்டில் எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரிகள் வந்தாலும் இறுதியாக ஜனநாயகமே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார வரவேற்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங். சார்பில் மனமார வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu Congress ,Selvapperunthakai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்