வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வ.உ.சிதம்பரனார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டியார் ஆகியோருக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாருக்கு கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் 40 லட்சம் ரூபாய் செலவிலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் 16 லட்சம் ரூபாய் செலவிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் கூறியபடி, தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம், பவானி சாகர், முடுக்கன்துறையில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முன்னாள் முதலமைச்சர் சுப்பராயனுக்கு நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரம், நவணிதோட்டக்கூர்பட்டியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: