காஞ்சிபுரம்: கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர முடியாத முதியோர்கள், ஊனமுற்றோர்களுக்கு, வாக்களிக்க விண்ணப்ப படிவங்களை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம் கட்டவாக்கத்தில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன், வாக்காளர்கள் வீட்டிற்கு சென்று வழங்கி, தெரிவித்ததாவது:
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் மற்றும் 45 சதவீதத்திற்கு மேல் பாதிப்புடைய தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நேற்று காஞ்சிபுரம் வட்டம் கட்டவாக்கம் கிராமத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க விருப்பமுள்ள முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் 12D படிவம் வழங்கப்பட்டது.
இதனை முதியோர்களும், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர முடியாத முதியோர்கள், ஊனமுற்றோர்களுக்கு வாக்களிக்க விண்ணப்ப படிவங்கள்: கலெக்டர் நேரில் வழங்கினார் appeared first on Dinakaran.