வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி

பள்ளிப்பட்டு: திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் உச்சகட்ட கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் மூன்று நாட்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து பலியானார். தொடர்ந்து, நேற்று முன்தினம் திருத்தணி பேருந்து நிலையத்தில் குருவராஜ்பேட்டையைச் சேர்ந்த எல்லப்பன் என்ற முதியவர் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து இறந்தார்.

பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் ஊராட்சி செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமந்தடி (64). இவர் நேற்று மதியம் அங்குள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கடும் வெயிலின் தாக்கத்தால் ஆதிமந்தடி திடீரென்று சுருண்டு விழுந்தார். பொதுமக்கள் ஆதிமந்தடியை பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆதிமந்தடி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கத்திரி வெயிலின் தாக்கத்தால் கடந்த 3 நாட்களில் 3 பேர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: