விஏஓக்களை பாதுகாக்க சட்டம் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருள் ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் 12,500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த ஏப்ரல் 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட பின் இழப்பீடு வழங்குவதால் எந்த பலனும் இல்லை. பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி கடந்த மே மாதம் அளித்த விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, கோரிக்கை மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

The post விஏஓக்களை பாதுகாக்க சட்டம் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: