ஒன்றிய அரசின் ஏற்றுமதி தடையால் உச்சம் தொட்டது அரிசி விலை; வெளிநாட்டிற்கு விமானத்தில் அரிசி எடுத்து செல்லும் தமிழக பயணிகள்..!!

சென்னை: பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு இந்திய அரசாங்கம் விதித்திருக்கும் திடீர் தடையால் அயல் நாடுகளுக்கு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினர், தங்களது உடமைகளையும், அரிசியையும் விமானத்தில் எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியர்களில் அன்றாட உணவு பழக்கத்தில் பெரும் பங்கு வகிப்பது அரிசியில் ஆன உணவு வகைகளே. ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் உள்ளூர் சந்தைகளில் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காகவே கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத அரிசி வகை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி விலையை எகிற செய்திருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அரிசி வகை உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசிக்கு என செலவிடும் தொகையால் தங்களது அன்றாட செலவீனம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சொந்த ஊர் திரும்பிவிட்டு மீண்டும் தமிழ்நாடு செல்லும் தமிழர்கள், தங்களது உடமையுடன் அரிசியையும் எடுத்துச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. விமானத்தில் நபர் ஒருவர் 25 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்றாலும் அரிசியின் தேவையை உணர்ந்து பிற உடமைகளை தவிர்த்து அட்டை பெட்டிகளில் 2 அல்லது 3 வாரத்திற்கு தேவையான அரிசியை எடுத்துச் செல்கின்றனர். இந்திய வம்சாவளியினரின் தேவை அறிந்து உடனடியாக ஒன்றிய அரசு அரிசி ஏற்றுமதிக்கு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் என்பதே வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post ஒன்றிய அரசின் ஏற்றுமதி தடையால் உச்சம் தொட்டது அரிசி விலை; வெளிநாட்டிற்கு விமானத்தில் அரிசி எடுத்து செல்லும் தமிழக பயணிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: