திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை மலையப்பபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் நவீன்குமார்(28). இவர் நடராஜபுரத்தை சேர்ந்த ரவுடி கலைப்புலி ராஜாவிடம்(28) தொடர்பில் இருந்துள்ளார். சமீப காலமாக அவரிடமிருந்து விலகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலைப்புலி ராஜா, ஆங்கரை மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த நாத்(29), சுப்பிரமணியன், ரமணா மற்றும் 2 பேர் சேர்ந்து கடந்த 3ம் தேதி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் உள்ள காலிமனை அருகே நவீனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கலைப்புலி ராஜா மற்றும் நாத் ஆகியோர் காணக்கிளியநல்லூர் தச்சன்குறிச்சி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது, ரவுடி கலைப்புலி ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இன்ஸ்பெக்டர் சரவணனை தாக்கி தப்ப முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக தன்னிடம் இருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியால் கலைப்புலி ராஜாவின் வலது முழங்காலில் சுட்டார்.

இதில் காயமடைந்த கலைப்புலி ராஜா, தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து வலது கால் முட்டிக்கு கீழ் எலும்புமுறிவு ஏற்பட்டு காயமடைந்த நாத் ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணையில், லால்குடி டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தமிழரசன். கொலை, கொள்ளை, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள பிரபல ரவுடி. இவர் செய்யும் அனைத்து விதமான சம்பவங்களுக்கும் அவரது விசுவாசிகளான நவீன்குமார் மற்றும் கலைப்புலி ராஜா பக்கபலமாக இருந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் ரவுடி தொழிலில் யார் பெரியவர் என்ற மோதல் நீண்ட வருடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த முன் விரோதம் காரணமாக நவீன்குமாரை கலைப்புலி ராஜா வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னையில் மனைவி, மகன்
நவீன்குமார் லால்குடி மலையப்பபுரத்தை சேர்ந்த அனுசுயாவை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் பிரசன்னா என்ற மகன் உள்ளார். மனைவியும், குழந்தையும் சென்னையில் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். அனுசுயா தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நவீன்குமார் மட்டும் லால்குடியில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார்.

The post திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி appeared first on Dinakaran.

Related Stories: