புற்களுக்கு மவுசு அதிகரிப்பு எதிரொலி வைக்கோல் கட்டுகள் விற்பனையாகாமல் தேக்கம்

*யாருமே வாங்க முன்வரவில்லை என்று விவசாயிகள் ஆதங்கம்

தஞ்சாவூர் : புற்களுக்கு மவுசு அதிகரிப்பு எதிரொலியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கோல் கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. வாங்க யாருமே முன்வரவில்லை என்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சம்பா அறுவடை பணிகள் நடைபெறும் போது வைக்கோல் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவர்கள் வைக்கோல்களை வாங்கி லாரிகளில் வெளியூருக்கு எடுத்து செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் வைக்கோல் கொண்டு செல்லப்படும். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைத்தது.

இப்போது கோடை நெல் அறுவடை பணிகள் முடிந்தவுடன் வைக்கோல் கட்டுகளை தயார் செய்து விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே விளை நிலங்களில் தேங்கி கிடக்கின்றன. தஞ்சாவூரை அடுத்து மேலஉளூர், மடிகை, திருக்கானூர்பட்டி, குருகுளம், மருங்குளம் போன்ற பகுதிகளில் வைக்கோல் கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.150 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த கட்டுகளை கேரளா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் வந்து போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வழக்கத்தை விட புல் வரத்து அதிகமாக இருப்பதாலும் வைக்கோல் விற்பனை பாதிப்படைந்துள்ளது.

வைக்கோலை விட புற்கள் விலை மிகவும் குறைவாக இருப்பதால் மாடுகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் வைக்கோலை வாங்கி அதிகளவில் இருப்பு வைக்க விரும்புவதில்லை. இப்போது ரூ.60 முதல் 80க்கு விற்பனை செய்தாலும் வியாபாரிகள் வாங்க முன் வருவதில்லை. மாடுகளை வளர்ப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் வைக்கோல் வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post புற்களுக்கு மவுசு அதிகரிப்பு எதிரொலி வைக்கோல் கட்டுகள் விற்பனையாகாமல் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: