பாம்பன் சுவாமிகள் கோயில் உள்பட 65 கோயில்களில் இன்று குடமுழுக்கு

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன், ஆலங்குடி, குருபகவான் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு இன்று குடமுழுக்கு நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, தேர் மற்றும் குளங்கள் புனரமைப்பு, கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக நடந்து வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோயில்களில் பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடமுழுக்கு நடந்து 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி,

ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், ரூ.170.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வரும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில், ரூ.1.52 கோடியில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) கோயில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடந்த திருச்சி மாவட்டம், பூர்த்தி கோயில் திருமுக்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு இன்று நடைபெற உள்ளது.

குடமுழுக்கு நடைபெறும் கோயில்களில் சேத்துப்பட்டு கருகாத்தம்மன், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோயில்,

கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் சுந்தர விநாயகர் ஆகிய கோயில்களும் அடங்கும். இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும், கோயில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

The post பாம்பன் சுவாமிகள் கோயில் உள்பட 65 கோயில்களில் இன்று குடமுழுக்கு appeared first on Dinakaran.

Related Stories: