தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததால் ஆவேசம் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து வீசிய கவுன்சிலர்கள்: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேர் திடீரென எழுந்து நின்று ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், காங்கிரஸ் கவுன்சிலர் சிவராஜசேகரன் தனது கையில் வைத்திருந்த ஒன்றிய பட்ஜெட்டின் நகலை கிழித்தெறிந்து வீசினார். தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ் கவுன்சிலர்கள் தீர்த்தி, சுகன்யா செல்வம், சங்கீதா உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து மன்றத்துக்குள் வீசினர்.

அப்போது எம்.எஸ்.திரவியம் பேசுகையில், ‘ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். இவர்களை தொடர்ந்து மதிமுக உறுப்பினர் ஜீவன் உள்ளிட்ட கவுன்சிலர்களும் தாங்கள் கொண்டு வந்த ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்களை மேயர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.

The post தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததால் ஆவேசம் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து வீசிய கவுன்சிலர்கள்: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: