வேகமாக வந்து கொண்டிருக்கிறது புயல் சென்னை கடற்கரை பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை: தடைமீறி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த ஜோடிகளை வெளியேற்றிய போலீசார்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடற்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர் சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி சென்னை எண்ணூர் முதல் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மிக்ஜாம் புயல் குறித்து போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வாக உள்ள மீனவ குப்பங்களில் உள்ள பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் தங்கது குடும்பத்துடன் வந்தனர். அவர்களை போலீசார் கடற்கரை சர்வீஸ் சாலையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். புயல் காரணமாக நேற்று மாலை கடல் வழக்கத்தை விட கூடுதல் சீற்றத்துடன் அலைகள் காணப்பட்டது. போலீசாரின் தடையை மீறி சில இளம் ஜோடிகள் மற்றும் வாலிபர்கள் மெரினா, பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்பகுதிகள் சென்று கடல் இறங்கினர். அவர்களை போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து விரட்டினர்.

மெரினா பகுதியில் குதிரைப்படை காவலர்கள் கடலில் யாரும் இறங்காத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரை மணல் பகுதிகளில் யாரும் கடைகள் அமைக்க போலீசார் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க வில்லை. அதையும் மீறி கடைகள் அமைத்த சிறு வியாபாரிகள் போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மெரினா காமராஜர் சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு செல்லும் சர்வீஸ் சாலைகள் அனைத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்லாதப்படி தடை வதித்து போலீசார் பாதுகாப்பு மற்றும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேகமாக வந்து கொண்டிருக்கிறது புயல் சென்னை கடற்கரை பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை: தடைமீறி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த ஜோடிகளை வெளியேற்றிய போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: