செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது

புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜி தற்போது வரை சென்னை புழல் சிறையில் உள்ளார்.

இதில் கடந்த முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் அவரது வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓஹா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு நேற்று முன்தினம் ( திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்றைய விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: