சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூல்!

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர் ஆக இருக்கலாம், மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவராக இருக்கலாம், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவராக இருக்கலாம். இப்படியாக பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 55, 682 விபத்துகள் பதிவாகியுள்ளது.

இது 2020ம் ஆண்டு விட 10,000 சாலை விபத்துகள் அதிகம் கொண்டதாக காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 2021ம் ஆண்டு 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துகளால் அதிக மரணங்கள் நேரிடுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி சாலை போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தாத 9,526 பேரையும் அபராதம் செலுத்தி அறிவுறுத்திய சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்து வலியுறுத்தியுள்ளனர். கடந்த 20ம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராத தொகையாக 60 லட்சத்து 36 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

The post சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூல்! appeared first on Dinakaran.

Related Stories: