ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும்போது கடை முன் எடை போட்டு பதிவு செய்யக்கோரி வழக்கு: ஒன்றிய, தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடையின் முன்பு எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனுவிற்கு பதிலளிக்குமாறு ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தாலும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவு பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்கவும் மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நியாய விலை கடைகளில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் மின்னணு எடை தராசுகளை இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய நடைமுறைபடி பொருட்கள் முதலில் அளவீடு செய்த பிறகு பில் போடப்பட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு 20 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. பொருட்கள் எடை குறைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட போதிலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போதே ஒரு சாக்குக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை குறைவாகவே உள்ளது.

எந்த ஒரு தவறும் செய்யாமல் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையை இழந்து வருகிறார்கள். அதனால் கடைகளுக்கு கொண்டு வரப்படும் உணவு பொருட்களை கடைகளில் வைத்து எடை பார்த்து அதனை விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுவிற்கு, நான்கு வாரங்களில் ஒன்றிய அரசும் தமிழக அரசும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

 

The post ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும்போது கடை முன் எடை போட்டு பதிவு செய்யக்கோரி வழக்கு: ஒன்றிய, தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: