ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை: சீமான் ஆவேசம்

காரைக்குடி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை, நம் நாட்டை ஆள்கிறவர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை என சீமான் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை ராணுவத்தால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டையானது, நம் நாட்டை ஆளுகிற தலைவர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை. இந்திய நாட்டிற்கு அடிக்கப்பட்ட மொட்டை. எத்தனை ஆண்டுகளாக இந்த சேட்டையை இலங்கை செய்கிறது. இது இந்திய அரசின் கையாலாகாதனத்தை காட்டுகிறது. வளர்கிறோம் என பீற்றிக்கொள்ளும் அரசு, நாட்டை, மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை. மக்களை பற்றி, உயிர், உணர்வை பற்றி கவலைப்படவில்லை. மதம், சாதி, சாமி இருந்தால் போதும். இதுதொடர்பாகவே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோயிலை விட்டே அவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. அவர்கள் எப்படி மக்களை பற்றி கவலைப்படுவார்கள். எத்தனை காலம்தான் இதுபோன்று நடக்கும்? இதே தமிழனாக இல்லாமல், மலையாளி, கன்னடர், குஜராத்தி, பீகாரியோ மொட்டை அடிக்கப்பட்டு இருந்தால் ஒன்றிய அரசு சும்மா இருந்திருக்குமா? தமிழன் என்பதுதான் அவர்களது பிரச்னை. மொட்டையடிக்கிறார்கள். படகை கைப்பற்றி ஏலம் விடுகிறார்கள். கடலுக்குள் மீன் பிடிக்கும் உரிமை உள்ளது. கச்சதீவை மீட்டால் நமது கடல் தூரம் அதிகரிக்கும்.

நமது நாட்டின் மீது இலங்கைக்கு இன்னும் பயம் வரவில்லை. அவர்கள் நாட்டு மீனவர்களை இதுபோன்று செய்தால் சும்மா இருப்பார்களா? பாகிஸ்தான் ராணுவம் ஒருமுறை ஒரு இந்திய மீனவரை சுட்டு விட்டார்கள். உடனடியாக இந்திய அரசு மொத்த ராணுவத்தையும் எல்லையில் நிறுத்தி எந்த நேரத்திலும் போர் துவங்கப்படலாம் என்ற பதற்றத்தை உருவாக்கியது. ஆனால் இலங்கை ராணுவத்தால் 850 மீனவர்களுக்கு மேல் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை: சீமான் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: