மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர்: கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,075 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 270 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலமாக 35 கன அடியும், இணைப்பு கால்வாய் மூலமாக 350 கனடியும் 405 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,137 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 146 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 192 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 101 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 36 கன‌அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 25 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,375 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 302 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 163 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 370 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 15 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

The post மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: