தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள் விற்பனை விலை அதிகரித்துள்ளதா? பள்ளிகல்வித்துறை விளக்கம்

சென்னை: தனியார் பள்ளிக்கான பாடநூல்களின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகளை பொறுத்தவரையில், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படிதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை யில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ல் 1 முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களின் உற்பத்தி செலவினம் ஒவ்வொரு பாடநூலுக்கும் தனித்தனியே கணக்கீடு செய்து விலை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.

பிறகு 2019, 2020ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின்படி அச்சடிக்கப்படும் பாடநூல்களின் பக்க எண்ணிக்கையை கொண்டு விலை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர், அரசுக்கு எழுதிய கடிதத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் மற்றும் மெட்ரிகுலேஷன்,

இதர தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விற்பனை விலையில் 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு 3 பருவங்களாகவும், 8 முதல் பிளஸ் 2 வரை ஆண்டு பதிப்பாகவும் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடநூல்களின் உற்பத்தி பொருட்களான தாள், மேலட்டை மற்றும் அச்சுக்கூலி உயர்ந்துள்ளதால் ஒரு பாடப் புத்தகத்துக்கான உற்பத்தி செலவினம் விற்பனை விலை சராசரியாக 45% உயர்ந்துள்ளதாகவும், 2024-25ம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களுக்கு புதிய உற்பத்தி செலவினம் அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பாடநூல்களின் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் விற்பனை பாடப்புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும். இலவச பாடப்புத்தகங்களுக்கு அசல் உற்பத்தி செலவினம், போக்குவரத்து செலவினம் மட்டுமே அரசிடம் கோரப்படுகிறது. 1 முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்கள் மற்றும் 8 முதல் பிளஸ்2 வரை உள்ள தமிழ் வழி பாடநூல்கள் மற்றும் சிறுபான்மை மொழிப்பாடநூல்கள், விற்பனை விலை மறு நிர்ணயம் செய்யவும், தமிழ்வழி பாடநூல்களின் விற்பனை விலையையே, ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை வழி பாடநூல்களுக்கும் (மொழிப்பாடநூல், ரீடர் நீங்கலாக) விலை நிர்ணயம் செய்ய அனுமதி ஆணை வழங்க வேண்டும் என மேலாண் இயக்குநர் கேட்டு்ள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநரின் கருத்துருவை ஏற்று, 2024-25ம் கல்வி ஆண்டு முதல் 1-7ம் வகுப்பு வரை 3 பருவங்கள், 8- பிளஸ் 2 வரை தமிழ்வழிப் பாடநூல்கள் மற்றும் சிறுபான்மை மொழிப்பாட நூல்களுக்கு விற்பனை விலை மற்றும் நிர்ணயம் செய்தும் மேலாண் இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடக்கப் பள்ளிகளுக்கான பாடநூல்களின் விற்பனை விலை முந்தைய விலையை விட சராசரியாக ரூ.30ம், உயர் வகுப்புகளுக்கான பாடநூல்களின் விற்பனை விலை முந்தைய விலையை விட ரூ.80 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 2015 மற்றும் 2018 மூன்றாண்டு இடைவெளியில் பாடநூல் விலை ஏற்றப்பட்டது. தொடர்ந்து 2021ம் ஆண்டு விலை ஏற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சி பாடநூல் விலையை ஏற்றவில்லை. இப்போதுதாள், மேலட்டை போன்ற உற்பத்தி செலவினம் அதிகரித்திருப்பதை ஒட்டி, லாப நோக்கற்று, சிறிய அளவில் பாடநூல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

The post தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள் விற்பனை விலை அதிகரித்துள்ளதா? பள்ளிகல்வித்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: