பாளை தசரா விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் புடைசூழ மகிஷாசூரனை வதம் செய்தார் ஆயிரத்தம்மன்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை : பாளை தசரா விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்த சூரசம்ஹாம் எருமைகிடா மைதானத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் மை சூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் கடந்த 3ம்தேதி தசரா விழா துவங்கி 12ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையில் ஆயிரத்தம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோயில்களில் தசரா திருவிழா கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தசரா விழா துவங்கி கோ லாகலமாக நடந்து வந்தது.

இதையொட்டி ஆயிரத்தம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர், விஸ்வகர்மா, கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், தேவி உலகம்மன், தூத்துவாரி அம்மன், பேராத்துசெல்வி அம்மன், முப்பிடாதி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோயில்களிலும் அம்பாள், தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருக்கும் வைபவம் நடந்தது.

இதைத்தொடர்ந்து விஜயசதமியையொட்டி கடந்த 12ம்தேதி நள்ளிரவு பாளை ஆயிரத்தம்மன் உள்பட 12 அம்மன் கோயில்களிலும் சப்பர பவனி துவங்கியது. தொடர்ந்து பல்வேறு தெருக்களில் வலம் வந்து பெருமாள், சிவன் கோயில் உள்ளிட்ட 8 ரதவீதிகளிலும் வலம் வந்தது. நேற்று 13ம்தேதி காலை 12 அம்மன் சப்பரங்களும் பாளை சிவன் கோயில் திடல், ராமசாமி கோயில் திடல், ராஜகோ பால சுவாமி கோயில் திடல்களில் பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டன.

பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு பாளை மார்க்கெட் புறக்காவல் நிலையம், வண்டிமலைச்சியம்மன் கோயில் பகுதியில் 12 சப்பரங்களும் அணிவகுத்து பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டன. இதன்பின்னர் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலை வழியாக சப்பரங்கள் மாரியம்மன் கோயில் எதிரில் எருமைக்கிடா மைதானத்துக்கு சென்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு 11 அம்மன் சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

சூரசம்ஹாரம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பாளை சமாதானபுரம், மார்க்கெட், தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் விஜயகுமார், கீதா ஆகியோரின் வழிகாட்டுதல் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post பாளை தசரா விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் புடைசூழ மகிஷாசூரனை வதம் செய்தார் ஆயிரத்தம்மன் appeared first on Dinakaran.

Related Stories: