சாயல்குடி, அக். 27: கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 57ம் குருபூஜை மற்றும் 31 ஆண்டு முளைப்பாரி திருவிழாவையொட்டி நான்கு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரியமாடுகள் போட்டியில் 12 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டது. இதில் ரூ.80 ஆயிரம் முதல் பரிசினை கம்பம் அழகுபாண்டிபரணி மாடுகளும், ரூ. 70 ஆயிரம் 2ம் பரிசினை கடம்பூர் கருணாகரராஜா மாடுகளும், ரூ. 60ஆயிரம் 3ம் பரிசினை புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கவுசல்யா மாடுகளும் பெற்றன.
சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்த நடுமாடுகள் வண்டி போட்டியில் 24 வண்டிகள் கலந்துகொண்டது. இதில் ரூ.70 ஆயிரம் முதல்பரிசினை தூத்துக்குடி மெடிக்கல் விஜயகுமார் மாடுகளும், ரூ.60 ஆயிரம் 2ம் பரிசினை கடம்பூர் கருணாகரராஜா மாடுகளும், ரூ.50 ஆயிரம் 3ம் பரிசினை செல்வம் மாடுகளும் பெற்றன. சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்த சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 29 வண்டிகள் கலந்துகொண்டது. இதில் இரண்டு சுற்றுகளாக நடந்தது. முதல்சுற்றில் மருதால்குறிச்சி சுப்பம்மாள் மாடுகள் முதல் இடத்தையும், கடம்பூர் கருணாகரராஜா மாடுகள் இரண்டாம் இடத்தையும், சுந்தர்ராஜ் மாடுகள் மூன்றாம் இடத்தையும், சித்திரங்குடி ராமமூர்த்தி மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றது.
இரண்டாவது சுற்றில் கம்பத்துபட்டி பால்பாண்டி மாடுகள் முதலிடத்தையும், மேலச்செல்வனூர் வீரக்குடிமுருகையார் மாடுகள் இரண்டாம் இடத்தையும்,காளிமுத்து மாடுகள் மூன்றாம் இடத்தையும், விக்கிபாண்டி மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றது. மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு ரொக்கபரிசும், குத்துவிளக்கு போன்ற சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர்உறவின்முறை, ஆப்பனாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் செய்திருந்தனர்.